கர்த்தர் பெரியவர்

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!

Tuesday, March 10, 2009

இறுதி தீர்ப்பு இறைவன் கையில்!!!

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்ட அன்பு சகோதர சகோதரிகளே!

நம்மெல்லோரையும் விட அதிக பிரயாசபட்ட பவுல் அவர்கள் கூட,
"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்."
என்று விசுவாசத்தில் எழுதியிருந்தாலும்
.

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். (கொரி௯:௨௭)
என்று கூறியிருப்பது ஒரு மனிதன் எந்நிலையிலும் ஆகாதவனாகபோக வாய்ப்பிருக்கிறது என்பதை தெரியப்படுத்தத்தான் என்று நான் கருதுகிறேன்.

.
இன்றைய கிறிஸ்த்தவர்கள் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்றுக்கொண்டால் பரலோகம் தங்களுக்கு எழுதப்படாத சொத்துபோல அநேகர் எண்ணிக்கொள்கின்றனர்.எதோ தாங்கள் எல்லாவற்றிலும் ஜெயித்துவிட்டதாகும் மற்றவர்கள் எல்லோரும் பாவிகள் போலவும் கருத ஆரம்பித்துவிடுகின்றனர் அது சரியா?

.
இன்று உலகில் நடக்கும் அனேக தீவிரவாதங்களை தீனி போட்டு வளர்த்தவர்களும், அருவருப்பான பாலியல் முரண்பாடுகளையும் (ஓரின சேர்க்கை, ஆபாச இனையதளங்கள்) பப்ளிக் பண்ணி, உலகை கெடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கிறிஸ்த்தவ நாடுகளே! இப்படி அநியாயம் பண்ணுபவர்கள் எல்லாம் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்துக்காக் பரலோகம் சென்றுவிடுவார்கள் என்று எண்ணுவது தவறு.

.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோ ௧:௧௨)
.

என்ற வார்த்தைகள்படி இரட்சிக்கப்பட்டரவரை கர்த்தர் அனுதினை சபைகளில் சேர்த்துக்கொண்டு வந்தாலும் அந்த சபையில் உள்ள எல்லோரும் பரலோகம் போய்விடுவதில்லை. சபைகளுக்கு கர்த்தர் கொடுக்கும் எச்சரிப்புகள் வெளிப்படுத்தின விசேஷத்தில் தெளிவாக உள்ளது.
.

நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; ............... நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
.

இவைகள் எல்லாம் பரிசுத்த ஆவியானவர் தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டமாகிய சபைக்கு விடுத்த எச்சரிப்புகள் "ஜெயம்கோள்கிறவன் எவனோ" என்ற வார்த்தை "அழைக்கப்பட்டவர்கள் அநேகர் அனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்" என்ற கருத்தையே முன்வைக்கிறது.
.

பத்து கன்னிகைகளும் மணவாளனை காண அழைக்கப்பட்டவர்கள்தான் மணவாளனை காணவேண்டும் என்ற ஆவலுடன் புறப்பட்டு வந்தவர்கள்தான் ஆனால் எல்லாராலும் மனவாளனுடன் உள்பிரவேசிக்க முடியவில்லை என்பதை கருத்தில் கொள்க.

அநேகர் மனம்திரும்பி ஞானஸ்தானம் பெறலாம்! ஆநேகர் ஆண்டவரின் ராஜ்யக்த்துக்கு போக ஆவலாய் இருக்கலாம்! ஆனால் இயேசு சொன்னதுபோல் "பிதாவின் சித்தம் செய்பவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல்" சும்மா கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லிக்கொண்டு ஆண்டவரின் வழியை பின்பற்றாதவன், ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழவிரும்பாதவன் அதில் பிரவேசிப்பது இல்லை!

இப்படி வசனங்கள் சொல்கையில், யார் பிதாவின் சித்தத்தை சரியாக செய்தார் யார் மனம்திரும்பி பில்ளைகளைபோல ஆனார் என்றும், யார் வேத பாரகர் பரிசேயருடைய நீதியிலும் அதிக நீதி செய்தார் என்பதையும் எப்படி அறுதியிட்டு சொல்லமுடியும்?
.

எனவே இறுதி தீர்ப்பு இறைவன் கையில்தான் உள்ளது!


Wednesday, March 4, 2009

என்மீது தேவ சித்தம் என்ன?

தங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் எபதை அறிய எல்லோருக்கும் நிச்சயம் ஆவல் இருக்கும். அதற்க்காக ஜாதகம் ஜோஷியம் பார்த்தல், குறிகேட்டல், முத்து போட்டு பார்த்தல் போன்ற பல்வேறு செயல்களில் உலக மனிதர்கள் ஈடுபட்டு, எதிகாலம் என்ன என்பதை அறிந்துகொள்ள மிகுந்த ஆவலுடன் அலைகின்றனர். ஆனால் நம் தேவனாகிய கர்த்தர் நம்மிடம் "நாள் பார்க்காமல் குறி கேளாமலும் இருப்பாயாக" என்ற வார்த்தையின் மூலம் இப்படிப்பட்ட காரியங்கள் தவறு என்று தடை விதித்துவிட்டார்.
.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து "என் பிதாவின் சித்தம் செய்யவே நான் வந்தேன்" என்று கூறியதோடு அவர் சித்தத்தை சரியாக செய்து முடித்த திருப்தியுடன் பிதாவின் கையில் தன் ஆவியை ஒப்புகொடுத்தர். நமக்கும் அதுபோல் நம்மீதுள்ள தேவதிட்டம் என்ன என்னை ஆண்டவர் எதற்க்காக படைத்தார் என்ற வெளிச்சமே இல்லை என்றால் எப்படி அவர் சித்தத்தை நிறைவேற்ற முடியும்?
.

இரட்சிக்கப்படுவதும் ஆண்டவரை அறிந்துகொள்வதும் நித்ய ஜீவனுக்கு தகுதியுள்ளவனாக வாழ்வதும் எல்லா மனிதர்கள் மேலும் ஆண்டவருக்கு உள்ள ஒரு பொதுவான திட்டம். அதைப்பற்றி வேதமே நமக்கு விளக்கி கூறுகிறது. ஆனால் எப்படி ஆண்டவர் பவுலை சந்தித்தபோது அவரை புரஜாதிக்கு அப்போஸ்தலனாக நியமித்தரோ, ஒரு பேதுருவை வைத்து தன் சபையை கட்ட தீர்மானித்தாரோ, ஒரு எஸ்தர் மூலம் யூத ஜனங்களை விடுவித்தாரோ அதுபோல் ஒவ்வொருவர் மேலும் ஒரு தனிப்பட்ட மேன்மையான திட்டம் தேவனுக்கு நிச்சயம் உண்டு!

  • தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (ரோ: 12:2)

  • நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். (எபே 5:17)

என்று வேதம் நமக்கு போதிப்பதால் எல்லோருக்கும் அவரவர் மீதுள்ள தேவ திட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது . தேவ சித்தத்தை அறிய நம் மனதை ஒருமனப்படுத்தி விடாபிடியான தொடர் ஜபம் நிச்சயம் தேவை என்றாலும், வெறும் ஜெபத்தால் மட்டும் தேவ சித்தத்தை அறியமுடியாது. தேவனிடமிருந்து நம்மேல் உள்ள தேவதிட்டத்தை பெறுவதற்கு ஜெபத்தை தவிர மேலும் இரண்டு தகுதிகள் நிச்சயம் வேண்டும்!

1.தேவன் என்ன சொன்னாலும் கேட்கும் மனபக்குவம்
2. மாமிசத்த்தோடும் இரத்தத்தோடும் யோசிக்க கூடாது

1. தேவன் என்ன சொன்னாலும் கேட்கும் மனப்பக்குவம்!
தேவனின் திட்டம் அறிய முற்ப்படும் ஒவ்வௌர்வரும் முதலில் தன்மனதில் உள்ள எல்லா திட்டங்களையும் குறிக்கோள்களையும் குப்பையில் தூக்கி போடவேண்டும். இன்று உலகில் சிறு பிள்ளைகள் கூட நான் டாக்டராவேன், எஞ்சினியர் ஆவேன் கலக்டராவேன் என்பதிலிருந்து பாஸ்டராவென் என்பது வரை ஏதாவது ஒரு திட்டத்தோடு வாழ்வதை பார்க்க முடியும் ஆனால் "உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல" என்று கர்த்தர் சொல்கிறார்! நாம் போடும் எந்த திட்டமும் கர்த்தரின் திட்டம் அல்ல என்பதை முதலில் அறியவேண்டும்.

"ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்" என்று நடுங்கி கேட்ட பவுலால் ஆண்டவர் மிகப்பெரிய காரியங்களை சாதிக்க முடிந்தது! அதுபோல் நம்மிடமும் ஒரே கேள்வி மட்டும்தான் இருக்கவேண்டும். மேலும் அவர் எதை சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனபக்குவமும் வேண்டும். "நித்ய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும்?" என்று வாஞ்சையோடு கேட்டுவந்த வாலிபன் "உனக்குள்ளதை விற்று தரித்திரருக்கு கொடு" என்ற எதிர்பார்க்காத இயேசுவின் பதிலால் நிலைகுலைத்து வருத்தத்தோடு போனான் என்று வேதம் சொல்கிறது.
.
சமீபத்தில் இடம் வாங்குவதற்க்காக ஒருவரிடம் ரூபாய் 80000/-கொடுத்து ஏமாந்த ஒரு பெண்மணி, ஏமாற்றியவன் கொடுத்து, பணமின்றி திரும்பிய காசோலையையும் காண்பித்து இந்த பணம் கிடைக்குமா? அல்லது கோர்ட்டில் கேஸ் போடலாமா? தேவசித்தம் என்ன? என்று அறிய விரும்பினார்கள். அந்த தேவமனிதர் ஆண்டவரிடம் அதுபற்றி விசாரித்து மிக சாதரணமாக "அந்த பணத்தை வேண்டாம் என்று விட்டுவிடச்சொல் கர்த்தரால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும்" என்றார். இதை கேட்ட அந்த பெண்மணி அவரை திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். "எவ்வளவு கஷ்டபட்டு நான் சேர்த்த பணம் இவ்வளவு சுலபமாக விட்டுவிடு என்று சொல்கிறீர் உமக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை" என்று கோபத்தோடு கூறினார்கள்
இங்கு அவர்களே ஒரு முடிவான திட்டத்துடன் வந்துவிட்டார்கள் பிறகு எந்த தேவ சித்தமும் இங்கு வேலை செய்யாது!
அதுபோல் ஒரு சம்பவம் எரேமியா புத்தகத்திலும் உண்டு!

பாபிலோன் ராஜா தேசத்தின் மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம், கல்தேயருக்குப் பயந்தபடியினால். தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.
.
அப்பொழுது அவர்கள் எரேமியா தீர்க்கதரிசியை அழைத்து தேவனிடத்தில் விசாரிக்க சொன்னார்கள் அவர் சொல்லும் வார்த்தைக்கு கீழ்படிவோம் என்று சொன்னார்கள்
.
அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.

ஆனால் எரேமியா நீங்கள் எகிப்த்துக்கு போனால் அழிந்துவிடுவீர்கள் இங்கேயே தங்கியிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொன்னபோது அவனை திட்டி நீ பொய் சொல்லுகிறாய்; ........கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள். இப்படி தங்கள் மனிதில் ஒரு திட்டம் வைத்துக்கொண்டு ஆண்டவரின் திட்டத்தையும் அறிய நினைத்தால் முடியாது.

எனவே தேவதிட்டம் அரிய முற்ப்படும்முன் நம் சுயதிட்டங்கள் எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும்!

2. மாமிசத்த்தோடும் இரத்தத்தோடும் யோசிக்க கூடாது:

தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; (கலா 1:16) என்று சொல்லும் பவுலின் வார்த்தைகள்போல், மாமிசத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணினால் தேவசித்தம் ஒருநாளும் நிறைவேறாது.

ஒருமுறை ஆண்டவர் ஒரு மனிதரிடம் ஒரு முக்கியமான தேவ நோக்கத்தை நிறைவேற்ற சுமார் 1800௦KM தூரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஊருக்கு போகும்படி கட்டளையிட்டார். ஆனால் அந்த உருக்குள் நீ நுழையும்போது ரயிலிலோ, ரோடு வழியாகவோ, வான் வழியாகவோ போகக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார். மீதம் உள்ள ஒரே வழி நீர் வழிதான் ஆனால் நீர் வழியில் போக எந்த வசதியும் கிடையாது. ஆனாலும் கர்த்தரின் வார்த்தையை நம்பி இரண்டுநாள் பிரயாணப்பட்டு அந்த ஊர் அருகே பொய் சேர்ந்த அந்த மனிதர் கடலின் ஓரம்போய் பல மணிநேரம் நிற்றும் அதை கடந்துபோக வழி எதுவும் இல்லை. உடனே ஆண்டவரை நோக்கி அழ ஆரம்பித்துவிட்டார் ஆண்டவரே நீர் சொன்னீர் என்று இவ்வளவு தூரம் வந்துவிட்டேன் நான் இங்கு எப்படி உள்ளே போவது? என்று ஜெபிக்க, சிறிது நேரத்தில் அவ்வழியே எதிர்பாராத விதமாக ஒரு சிறு மீன்பிடி படகுவந்து அவரை ஏற்றிசென்றது. அந்த படகில் வந்தவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசிங்கித்தபடியே கடந்து சென்றார். ஒருவேளை அவர் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு எப்படி போக முடியும் என்று யோசித்துகொண்டிருந்தால் நிச்சயம் அது முடியாமல்தான் போகும்!
.
கானான் தேசத்த்தை வேவு பார்க்கபோனவைகள் அங்குள்ள ரட்சஸ ஏனாக்கியரை பார்த்து பயந்து, நமது மாமிச பலத்தால் எப்படி மேற்க்கொள்ள முடியும் என்று யோசனைசெய்து அதை சுதந்தரிப்ப்து முடியாத காரியம் என்று துர்செய்தியை பரப்பினர்.
.
நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். (எண்: 13:31)
அனால் கானான் தேசத்தை வாக்குபண்ணிய கர்த்தரால் எல்லாம் கூடும் என்ற வெளிப்பாடு யோசுவாவுக்கும் காலேபுக்கும் மாத்திரமே இருந்தது. ஏனெனில் அவர்கள் தேவனின் சித்தத்தையும் நோக்கத்தையும் அறிந்திருந்ததோடு அதை நம் பலத்தால் மேற்க்கொள்ள முடியாவிட்டாலும் அதை பெற்றுத்தர கர்த்தரால் முடியும் என்று விசுவாசித்தார்கள்:
.
கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். (எண்:14-8) என்று விசுவாசவார்த்தை பேசினார்கள் அங்கு வாழ்ந்த மாமிச மலைகளையோ ரட்சஸ உருவங்களையோ பற்றி அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்கவில்லை அதனால் அவர்கள் ஜெயித்தார்கள்

.

அதுபோல் சவுலும் அவன் படை வீரர்களும் கோலியாத்தின் மாமிசத்தை பார்த்து அவனை மேற்க்கொள்ள முடியாது என்று பயந்து ஒதுங்கினார்கள். ஆனால் தாவீதோ அவன் மாமிச உருவத்தை பார்த்தது பயம் எதுவும் வரவில்லை கர்த்தரால் முடியும் என்று நம்பி ஜெயித்தான்.

.

எனவே அன்பானவர்களே தேவசித்தம் அறிந்தாலும், அதை நம் மாமிசபிரகாரம் யோசனை செய்து இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணி குழம்பிவிடக்கூடாது. அது எந்த காரியமானாலும் ஆண்டவரை நினைத்து துணிந்து ஒரு அடி எடுத்து வைத்தல் அடுத்த வழி தானாக திறக்கும்!

.

நாம் எத்தனை வழிகளில் தேவசித்தத்தை அறிய முயன்றாலும், தேவன் தன் சித்தத்தை தெரியப்படுத்தினால் அதை நாம் நிறைவேற்றுவதற்கு நம் மனதில் உள்ள உறுதியின் அடிபடையிலேயே ஆண்டவர் தன் சித்தத்தை தெரியப்படுத்துவார்! அது வேதம் வாசிக்கும்போது வெளிப்படலாம் அல்லது வேறு யார் மூலமோ சொல்லப்படலாம் அல்லது ஆண்டவரே கூட நம் இதயத்தில் பேசி தெரியப்படுத்தலாம்

.
தேவ சித்தத்தை அறிவோம்! நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவோம்!
.
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை ( மத்:7:21)